Wednesday 4 June 2014

அண்மை செய்திகள் (05-06-2013)

அண்மை செய்திகள் (05-06-2013) காலை, IST- 10.30 மணி,நிலவரப்படி,

4–வது நாள் தேடுதல் வேட்டையில் கால்வாயில் விழுந்து பலியான சிறுமி உடல் மீட்பு

வேலூர், ஜூன்.5–
ஜார்கண்ட் மாநிலம் கிரீடி மாவட்டம் மகப்பூரை சேர்ந்த இந்திரஜித் முகர்ஜி என்பவரின் மகள் பிரியங்கா (வயது 13). இவர் அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தாள். வேலூரில் தனது இளைய மகள் சிகிச்சைக்காக வந்திருந்த இந்திரஜித் தனது மூத்த மகள் பிரியங்காவையும் அழைத்து வந்திருந்தார். இங்குள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். அப்போது அங்குள்ள உறவினர் அமீத், அவரது மனைவி சீமா ஆகியோரை சந்தித்தனர்.
கடந்த 2–ந் தேதி அமீத், சீமா ஆகியோர் பிரியங்காவை உடன் அழைத்து கொண்டு கடைக்கு சென்றனர். பின்னர் மாலை 6 மணி அளவில் விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. விடுதி அருகே பேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென அங்கிருந்த சாக்கடை கால்வாயில் சிறுமி பிரியங்கா தவறி விழுந்தாள். அந்த கால்வாயில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சிறுமி பிரியங்கா தண்ணீருக்குள் சிக்கியவாறு கைகளை தூக்கியவாறு உயிருக்கு போராடினாள். அவரை, அமீத் காப்பாற்ற முயன்றார். ஆனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பிரியங்கா மழைநீரில் அடித்து செல்லப்பட்டாள்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் கால்வாயில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. மழையால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு கால்வாய் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி நடந்தது. கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களின் கீழ் சிறுமி உடல் சிக்கியிருக்கலாம் என கருதி 3 கட்டிடங்களை மாநகராட்சி பணியாளர்கள் இடித்து தேடுதல் வேட்டை நடத்தினர். 2 நாட்களாக பிரியங்கா உடல் கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து (நேவல்) கமாண்டன்ட் அர்ஜூன் தலைமையில் 10 வீரர்கள் நேற்று முன்தினம் இரவு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 3–வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. ராஜாளி கடற்படையினர் 3 குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு குழுவினர் பேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் இருந்து ஆற்காடு சாலை வரையிலும், 2–வது குழுவினர் சி.எம்.சி. சிக்னலில் இருந்து சி.எம்.சி. மருத்துவமனை வரையிலும், 3–வது குழுவினர் காட்பாடி சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலும் தேடும் பணியை மேற்கொண்டனர்.
இவர்கள் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் கால்வாயில் இறங்கி சிறுமியை தேடினர். நேற்று இரவு விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் மாணவியின் உடலை கண்டுபிடிக்கவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் ஒரு குழுவினர் இன்று காலை கால்வாய் தண்ணீர் வடிகால் பகுதியில் சிறுமி உடல் பதுங்கியுள்ளதா என தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தோட்டபாளையத்தில் இருந்த கால்வாயில் சல்லடை போட்டு தேடியபடி சென்றனர். தேசிய நெடுஞ்சாலையை கடந்து கால்வாயின் இருபுறங்களில் தேடி தேடி பார்த்தனர். துர்நாற்றம், முள்செடிகள் என பார்க்காமல் கால்வாய்க்குள் தேடியபடி சென்றனர். கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் கால்வாயில் ஒரு ஓரத்தில் சடலம் கிடந்ததை கண்டனர். ஆனால் அந்த உடல் பெரியதாக வீங்கி பெரிய பெண் போல கட்சியளித்தது. சேறும் சகதியுமாக இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து இன்று காலை 6.30 மணிக்கு உடலை மீட்டனர். அது சிறுமி பிரியங்கா உடல் என்பது உறுதிபடுத்தப்பட்டது.
இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல் வீங்கி போய் இருந்தது. உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மழைக்கு வெள்ளத்தில் பலியான சிறுமி உடல் மீட்கபட்டதால் 3 நாட்களாக பணியில் இருந்த மீட்பு குழவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மோடி - ஜெ., சந்திப்பால் பா.ஜ., கூட்டணியில் பரபரப்பு

சென்னை, ஜூன்.5–
பிரதமர் மோடியுடனான முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பு, அ.தி.மு.க.,வினரிடையே மகிழ்ச்சியையும், பா.ஜ., கூட்டணி கட்சிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. மாநில கட்சிகளான தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., போட்டியிட்டது.
தனிப்பெரும்பான்மை
இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி அதிகரித்தது. தேர்தல் முடிவில், தமிழகத்தில், அ.தி.மு.க., 37 இடங்களை கைப்பற்றி, சாதனை படைத்தது. மத்தியில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.எனவே, மத்திய அரசில் அங்கம் வகிக்கலாம்; விரும்பிய துறைகளை வாங்கலாம் என்ற அ.தி.மு.க., கனவு தகர்ந்தது. பா.ஜ., கூட்டணி இரண்டு இடங்களை கைப்பற்றியதால், கூட்டணியைத் தொடர, அனைத்து கட்சிகளும் முடிவு செய்தன. முதல்வர் ஜெயலலிதா, கடந்த முறை, காங்கிரஸ் அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால், தமிழகத்திற்கு போதுமான நிதி கிடைக்கவில்லை. வளர்ச்சிப் பணிகள் பாதிப்படைந்தன. மீண்டும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தால், தமிழக அரசு நிதிச்சுமையால் தள்ளாட வேண்டிய நிலை ஏற்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரதமரை சந்தித்து, நிதி ஒதுக்கும்படி மனு கொடுக்க, முதல்வர் முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, 64 பக்கங்கள் கொண்ட, கோரிக்கை மனுவை கொடுத்தார். தமிழகத்தின் பிரச்னைகளை முதல்வர் பட்டியலிட்டு, அவற்றுக்கு உதவும்படி கோரியுள்ளார்.அத்துடன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரையும் ஜெயலலிதா சந்தித்துள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் அவரை, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.பா.ஜ., கூட்டணி கட்சித் தலைவரான விஜயகாந்திற்கு, பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்காத நிலையில், ஜெயலலிதாவுக்கு டில்லியில் பா.ஜ., வட்டாரத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது, அ.தி.மு.க.,வினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 ராஜ்யசபா எம்.பி.,க்கள்
அதேநேரத்தில், ஜெயலலிதா, பா.ஜ., உடன் நெருங்குவது, பா.ஜ., கூட்டணி கட்சியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,விடம் உள்ள, 10 ராஜ்யசபா எம்.பி.,க்களின் ஆதரவுக்காக, பா.ஜ., தங்களை கழற்றி விட்டு விடுமோ என்ற பயத்தில், கூட்டணி கட்சியினர் உள்ளனர்.அடுத்த கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் எவ்விதமான அரசியல் நடவடிக்கை மேற்கொள்வார் என்பதை, அரசியல் வட்டாரம், ஆவலுடன் எதிபார்த்திருக்கிறது.
தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் கியாஸ் கசிந்து 50 பேர் மயக்கம்


தூத்துக்குடி, ஜூன் 5–
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் தனியார் மீன்பதப்படுத்தும் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் மீன்களை பதப்படுத்துவதற்காக முற்றிலும் குளிரூட்டப்பட்டு உள்ளது. இதற்காக அமோனியா கியாஸ் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு இந்த நிறுவனத்தில் பெண்கள் உள்பட 130 பேர் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். சுமார் 10 மணி அளவில் திடீரென அங்கு இருந்த ஒரு கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இந்த கியாஸ் அந்த பகுதி முழுவதும் பரவியது.
இதனால் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். ஆனாலும் அங்கு பணியாற்றி வந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் அடைந்தனர்.
மயமக்கம் அடைந்த அவர்களை சக ஊழியர்கள் மீட்டு தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம், சிப்காட் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று கியாஸ் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கலெக்டர் ரவிக்குமார் கியாஸ் கசிவு ஏற்பட்ட மீன் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் ஊழியர்களிடம் கியாஸ் கசிவு ஏற்பட காரணம் என்ன? என்பதை கேட்டறிந்தார். தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.
நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரம் மோடி : சொல்கிறார் சசிதரூர்
புதுடில்லி, 05-06-2014,
பிரதமர் மோடி, அனைவரும் வெறுக்கும் தன்மையில் இருந்து தன்னை நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக மாற்றிக் கொண்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் சசிதரூர் மோடியை வெகுவாக பாராட்டி உள்ளார். தி ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் தான் எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி பக்கம் சாயும் காங்கிரஸ்
அனைவரின் குற்றச்சாட்டுக்களுக்கும், வெறுப்புக்கும் ஆளான மோடி, தற்போது நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக திகழும் வகையில் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார். தனது முரட்டு தனமாக பிடிவாதத்தின் காரணமாக காங்கிரஸ் அவருடன் ஒத்துப் போக தவறிவிட்டது; இந்து மதவெறி கட்சி என்ற வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பா.ஜ.,வை ஆட்சி அமைக்கும் தகுதி பெற்ற தன்மையுடைய கட்சி என்ற இடத்திற்கு கொண்டு சென்றவர் மோடி; பா.ஜ., வின் மொழியையும், தன்மையையும் மாற்றி அமைத்துள்ளார் மோடி; மோதல்கள், பிரச்னைகள் ஆகியவற்றின் அப்பாற்பட்ட பாதையில் மோடி பயணிக்க துவங்கி விட்டார்; இந்தியாவில் மதரீதியாக சிறுபான்மையினராக உள்ள மக்கள் தங்களுக்கு எதிரானவர்களை கண்டு கொள்வார்கள்; அவர்களின் விமர்சனங்களுடன் நட்பு வைத்துக் கொள்வர். இவ்வாறு சசிதரூர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசுக்கு வரவேற்பு
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிதரூர், நாங்கள் அரசிடம் இருந்து இணக்கமான நிலையை கோரியதற்கு அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது; நாங்கள் எதிர்க்கட்சி தரப்பில் இருப்பதால் அரசு ஒப்புதல் அளிக்கும் விவகாரங்களை கண்மூடித்தனமாகவும், பிடிவாத போக்குடனும் எதிர்க்க மாட்டோம்; தனக்கு ஓட்டளிக்காதவர்களாக இருந்தாலும் அனைத்து இந்தியர்களுக்கும் தான் பிரதமராக இருப்பேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்; இது போன்றதொரு வார்த்தைகள் அவரிடம் இருந்து வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை; அநேகமாக மோடி தனது 2ம் பகுதியில் இறங்கி உள்ளார்; ஆனால் மோடியின் முதல் பாகம் மீண்டும் திரும்புமானால், பிரிவினையை ஏற்படுத்துவது போன்று அவரோ அல்லது அவரது அரசோ செய்தால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

No comments:

Post a Comment