Thursday 5 June 2014

இன்றைய அரசியல் செய்திகள் (05-06-2014)

இன்றைய அரசியல் செய்திகள் (05-06-2014) மாலை, IST- 03.30 மணி,நிலவரப்படி,

தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை, 05-06-2014,
ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாண பகுதியில் கல்விச் சேவையில் ஈடுபட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட பாதிரியார் பிரேம்குமாரை பத்திரமாக மீட்பது குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்று எங்கு சிறை வைத்துள்ளனர் என்பது தெரியவரவில்லை. மேலும் பாதிரியாரை கடத்தியது குறித்து ஆப்கானிஸ்தானின் எந்த தீவிரவாத அமைப்பும் வெளிப்படையாக பொறுப்பு ஏற்கவில்லை. பிரேம் குமாரை மீட்பது தொடர்பாக அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் தலையிட்டால்தான் பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தான் விரைந்து செயல்படும். கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார் உயிருக்கு ஆபத்து என அச்சம் எழுந்துள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment